துருக்கியிடமிருந்து இலங்கைக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி

இலங்கைக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை வழங்குவதற்கு துருக்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் வங்கி ஒன்றின் ஊடாக குறித்த கடன் உதவி வழங்கப்பட இருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

இதற்காக துருக்கி மற்றும் இலங்கைக்கு இடையில் நிதி ஒத்துழைப்பு சம்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட உள்ளது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவுலட் கவுசொக்லு மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மன்னார் பிரதேசத்தில் துருக்கி அரசாங்கத்தின் உதவியுடன் 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவுலட் கவுசொக்லு இன்று புறப்பட்டுச் செல்ல உள்ளார்.