துருக்கியில் இராணுவ புரட்சி தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்ட ஊடக அமைப்புகளை மூட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
துருக்கியில் கடந்த 15-ம் திகதி இரவு ராணுவத்தின் ஒரு பிரிவினர் அதிபர் எர்டோகனின் ஆட்சியை அகற்ற முயன்றனர்.
ஆனால் அந்த ராணுவ புரட்சியை எர்டோகனின் ஆதரவாளர்கள் முறியடித்தனர். இதில் புரட்சி படையைச் சேர்ந்த 100 வீரர்களும் எர்டோகனின் ஆதரவாளர்கள் 208 பேரும் உயிரிழந்தனர்.
அதைத் தொடர்ந்து மூத்த ராணுவ தளபதிகள் உட்பட 3000 வீரர்களும் நீதித் துறையைச் சேர்ந்த 2750 நீதிபதிகளும் கைது செய்யப்பட்டனர்.
அந்த வரிசையில் மூத்த அரசு அதிகாரிகள் உட்பட 8777 அரசு ஊழியர்களை அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் பணிநீக்கம் செய்தது.
இதனிடையே, ஊடக துறையிலும் பல்வேறு நடவடிக்கைகளை துருக்கி அரசு மேற்கொண்டு வருகிறது. துருக்கியில் 40க்கும் மேற்பட்ட செய்தியாளர்களைக் கைது செய்ய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து இருந்தன.
இந்நிலையில், துருக்கியில் இராணுவ புரட்சி தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து, தற்போது 10-க்கும் மேற்பட்ட ஊடக அமைப்புகளை மூட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் 45 செய்தித்தாள்களையும், 16 தொலைக்காட்சி சேனல்களையும் மூடவும் அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு தேசிய செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.