தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 331 பேருக்கு தடை

அம்பாறை – ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட இரண்டாம் வருட மாணவர்கள் 331 பேருக்கு, அப்பல்கலைக்கழகத்தின் வளாகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

புதிய மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்த மாட்டோம் என, ஏனைய பீடங்களிலுள்ள அனைத்து மாணவர்களும் வாக்குறுதி அளித்துள்ள நிலையில், முகாமைத்துவத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் மாத்திரம் அதற்கு இணங்கவில்லை என, அப்பல்கலைக்கழக மாணவர் சேவைகள் பணிப்பாளர் பேராசிரியர் ரமேஷ் அபுபக்கர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரிகள் மீண்டும் தெரியப்படுத்தும் வரை அவர்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி முகாமைத்துவப் பீடத்தின் இரண்டாம் வருடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் 214 பேர், தமிழ் மாணவர்கள் 97 பேர் மற்றும் 20 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், பகிடிவதை எனக் கூறி பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி நிர்வாகிகளால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அப்பல்கலைக்கழகத்தின் மாணவ பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.