தெற்காசிய நாடுகளின் மருத்துவ சங்கத்தின் மூன்றாவது மாநாடு…

பாலியல் சுகாதார மருத்துவம் பற்றிய தெற்காசிய நாடுகளின் மருத்துவ சங்கத்தின் மூன்றாவது மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(19) நடைபெற்றது.

இரண்டு வருடங்களிற்கு ஒரு முறை இடம்பெறும் இம்மாநாடு இம்முறை இலங்கையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ‘உடல், உள மற்றும் அறிவியல் ரீதியில் பாலியல் மருத்துவத்தின் புதிய எல்லைகள்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.

எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இடம்பெறும் இம் மாநாட்டில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பாலியல் சுகாதார மருத்துவம் பற்றிய விசேட நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

பாலியல் சுகாதாரத்துடன் தொடர்புடைய புதிய மருத்துவ முறைகள் பற்றிய விரிவுரைகள் இந்த மாநாட்டில் இடம்பெறவுள்ளதுடன், பாலியல் சுகாதாரம் சம்பந்தமான மருந்துகளின் அண்மைக்கால முன்னேற்றம் மற்றும் எதிர்கால வழிகாட்டுதல்கள் தொடர்பாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்படவுள்ளன.

மேலும், இதற்கு முன்னர் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இந்த மாநாடு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாலியல் சுகாதார மருத்துவம் பற்றிய தெற்காசிய நாடுகளின் மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மூவருக்கு ஜனாதிபதி இதன்போது விருது வழங்கினார்.