தெஹிவளை – வெள்ளவத்தை வரையிலான கரையோர ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்…

தெஹிவளை – வெள்ளவத்தை வரையிலான கரையோர ரயில் பாதை,இன்று(23) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 4 மணி வரை மூடப்படும் என, ரயில்வே போக்குவரத்து நடவடிக்கை அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பாலம் ஒன்றினைப் புனரமைப்புச் செய்யும் முகமாகவே, இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் பிரகாரம், மாத்தறை, காலி, அளுத்கமை ஆகிய இடங்களிலிருந்து, கொழும்பு கோட்டையை நோக்கிப் பயணிக்கும் அனைத்து ரயில் சேவைகளும், தெஹிவளை ரயில் நிலையம் வரை மட்டுமே இடம்பெறும்.

இதேநேரம் மாத்தறை, காலி, அளுத்கமை நோக்கி, கொழும்பு – கோட்டையிலிருந்து புறப்படும் ரயில்கள் யாவும், தெஹிவளை ரயில் நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிக்கும். மேலும், கொழும்பு – கோட்டையிலிருந்து புறப்படும் சகல ரயில்களும், வெள்ளவத்தை ரயில் நிலையம் வரை சேவைகளை மட்டுப்படுத்தியுள்ளதால், பயணிகள் தமது பிரயாண ஒழுங்குகளை முறையாக ஏற்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.