தேசபந்து தென்னகோனை கைது செய்து ஆஜர் செய்ய உத்தரவிடுக!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

மைனா கோ கம, கோட்டா கோ கம மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்களின்போது, கடமை தவறியதாக கூறி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்ய உத்தரவிடுமாறு கோரி தனிப்பட்ட முறைப்பாட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 136 (1) ( அ) அத்தியாயத்தின் கீழ்  இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அலரி மாளிகைக்கு அருகே நடந்த தாக்குதல்களின்போது கடும் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வர்த்தகர் செய்யத் மொஹம்மட் நியாஸ் மெளலானா என்பவரே இந்த தனிப்பட்ட முறைப்பாட்டு மனுவை , சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன ஊடாக தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மனு,  கோட்டை நீதிவான் நீதிமன்றில் நேற்று   (15) பரிசீலிக்கப்பட்ட போது, மனுதாரருக்காக மன்றில் ஆஜரான  சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன,  குறித்த மனுவை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு மாற்றுமாறு  கோரினார்.