தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் கோப் குழுவானது அதன் அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் செலவுகள் அதிகரித்துள்ளமைக்கான காரணம் அங்கு தேவையற்ற செலவுகள் அதிகரித்துள்ளமையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் இங்கு புதியவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளமை மற்றும் அவர்களுக்கான கொடுப்பனவுகளும் என்று கோப் குழு தெரிவித்துள்ளது.
மேலும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நிதி நிலைமையினை கருத்திற்கொள்ளாமல் 6 மாத பயிற்சிக்காக 500இற்கும் மேற்பட்ட புதிய பயிலுனர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவர்கள் மாதாந்தம் 25,000 சம்பளத்திலேயே பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களது பயிற்சி காலம் 6 மாதங்களாக காணப்பட்ட வேளை அதற்கு மேலதிகமாகவும் இவர்களது பயிற்சி காலங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோப் குழுவின் அறிக்கையின் படி குறித்த நிறுவனத்தின் நிர்வாக செலவுகளை குறைத்தால் இதனை நட்டத்தில் இருந்து மீட்கமுடியும் என்றும் கோப் குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் கணக்காய்வாளரினால் இது தொடர்பில் விசேட கணக்காய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், குறித்த சபைக்கு புதியவர்களை இணைத்துக்கொள்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோப் குழு அறிவுறுத்தியுள்ளது.