(FASTNEWS|COLOMBO) – அனைத்து தரப்பினரினதும் கருத்துக்கள் முன்மொழிவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களைப் பெற்று நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடுகளில் அந்நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் சபையொன்றை மாதாந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
அதன் முதலாவது கூட்டம் நேற்று(24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.
மகாசங்கத்தினர் உட்பட அனைத்து சமயத் தலைவர்கள், சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் சிரேஷ்ட அமைச்சர்கள் ஆளுநர்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பல்கலைக்கழக உபவேந்தர்கள் பேராசிரியர்கள் உள்ளிட்ட கல்விமான்கள், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி உள்ளிட்ட முப்படைகளின் தளபதிகள் மற்றும் பதில் கடமை பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு துறை முக்கியஸ்தர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்துக் கொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்தபோதும் உலகில் ஏனைய நாடுகள் இந்த பயங்கரவாத அமைப்பு தொடர்பில் பெற்றுக்கொண்டுள்ள அனுபவங்களின் படி நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதாகும் என்று குறிப்பிட்டார்.
இந்த சர்வதேச நிலைமைகளை கருத்திற்கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதில் அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு இதற்கு அவசியமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.