தேர்தல் டிசம்பர் 09ம் திகதி..! ஆனால் மூன்று கட்டளைச் சட்ட திருத்தங்கள் சிக்கல்..

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி நடத்த முடியுமாக இருந்தாலும்,தேர்தலுக்கான திகதி அறிவிப்பதற்கு முன்பாக தீர்க்கப்பட சில பிரச்சினைகள் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாநகர சபை, நகர சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டத்தின் திருத்தங்கள் ஆகியவையும் அதன் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மாநகரசபை,நகர சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் கட்டளை திருத்தச் சட்டத்திற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக உள்ளுராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நடவடிக்கை நிறைவுற்றவுடன், அடுத்த வாரமளவில் இது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் இதன் செயலாளர் கமல் பத்மசிரி சுட்டிக்காட்டியிருந்தார்.

இறுதியில் குறித்த திருத்த சட்டமூலமானது வர்த்தமானியில் வெளியிடப்பட்டு,எதிர்வரும் டிசம்பர் மாதம் உள்ளுராட்சித் தேர்தல்கள் நடத்தும் வகையில் அது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சாதாரணத்தர பரீட்சைகளானது டிசம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில்,அதற்கு இடையூறுகளை ஏற்படுத்தாமல் தேர்தலினை நடத்துமாறு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளருடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

 

(rizmira)