ஒரு நாள் அடையாள பணிப் பகிஷ்கரிப்பினை மேற்கொண்ட மின்சார சபை ஊழியர்கள் பழிவாங்கப்படுகின்றதாக தெரிவித்த மின்சார சபை இணைந்த தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் பழிவாங்கல்கள் தொடர்ந்தால் கடுமையான தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுக்க தயார் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஞ்சன் ஜயலால் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;
மின்சார சபை ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி அண்மையில் மின்சார சபை ஊழியர்கள் ஒரு நாள் அடையாள பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இவ்வாறு தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு எதிராக நிர்வாகம் தற்போது பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
மின்சார சபை குடியிருப்புக்களில் உள்ள ஊழியர்கள் வெளியேற்றப்படுகின்றனர். தன்னிச்சையான முறையில் இடமாற்றங்கள் செய்யப்படுகின்றன.
இவ்வாறு தொடர்ந்தும் பல்வேறு விதங்களில் பழிவாங்கல்கள் நடைபெறுகின்றன. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.
இந்நிலை தொடருமானால் கடுமையான தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் ரஞ்சன் ஜயலால் மேலும் தெரிவித்தார்.