தோல்விக்கு நான் தான் காரணமெனின் கெப்டன் பதவியிலிருந்து விலகத் தயார்

இந்திய கிரிக்கெட் தொடர்பில் நடக்கும் அனைத்து மோசமான முடிவுகளுக்கும் நான்தான் காரணம் என்றால் கெப்டன் பதவியில் இருந்து விலகத் தயார் என மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக இந்தியாவிற்கு எதிரான தொடரை வென்று வங்க தேசம் வரலாற்று சாதனை படைத்துள்ள நிலையில் செய்தியாளர் சந்திப்பின் போது கேள்விகளுக்கு பதில் அளித்த தோனி;

”இந்திய கிரிக்கெட் தொடர்பாக நடக்கும் அனைத்து மோசமான விஷயங்களுக்கும் நான் தான் காரணாம் என்று என் மீதுதான் பொறுப்பு சுமத்தப்படுகிறது. எல்லாம் என்னால் நடக்கிறது என்பது போல. இதை கேட்டு வங்க தேசத்தை சேர்ந்த ஊடகங்கள் கூட சிரிக்கின்றன”

எவ்வளவு காலம் கேப்டனாக இருப்பீர்கள் என கேட்கப்பட்ட போது ”ஊடகங்கள் என்னை மிகவும் நேசிக்கின்றன. இந்த கேள்வி எப்போதும் கேட்கப்பட்டு கொண்டே இருக்கிறது. என்னை நீக்குவது நியாயம் என்று நினைத்தால், அதன் பிறகு இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று நினைத்தால் கெப்டன் பதவியில் இருந்து விளக்கி விட்டு ஒரு வீரராக மட்டும் தொடர தயாராக உள்ளேன்.

என்னை பொருத்த வரையில் கெப்டன் யார் என்பது ஒரு விஷயமே இல்லை. நான் எப்போதுமே கெப்டன் ஆக வேண்டும் என வரிசையில் நின்றதும் இல்லை. கெப்டனாக இருப்பது என்பது ஒரு வேலை, மற்றோரு பொறுப்பு அவ்வளவுதான். கெப்டன் பதவியில் இருந்து நீக்க விரும்பினால் அதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை” என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து தோல்வி குறித்து கூறுகையில்;

அதிக ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்க தவறிவிட்டோம். அதே போல் தொடக்கமும் சரியாக அமையவில்லை. ஒரு ஜோடி ரன் குவிக்க ஆரபிக்கும் போது அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தபடி இருந்ததால், எதிர்பார்த்த அளவிற்கு ரன் குவிக்க முடியவில்லை. எனவே பந்துவீச்சாளர்களை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை” என அமைதியாய் பதிலளித்தாராம் டோனி.