“களேஸ் ஒவ் கரீஜ்” நிதியத்தினரின் ஏற்பாட்டிலான பருத்தித்துறையிலிருந்து தெற்குக்கு நடை பயணத்தை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கையின் தேசியக் கொடியை அசைத்து, நேற்று ஆரம்பித்து வைத்தார்.
காலி மாவட்டத்திலுள்ள கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்கு நிதி சேரிப்பதற்காக இந்த நடைபவனி நடத்தப்படுகின்றது. இந்த நடைபவனி பருத்தித்துறை முனையில் இருந்து ஆரம்பமாகியது.
ஆரம்ப நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்த்தன, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மதத்தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நடைபவனி, கரவெட்டி பிரதேச செயலகத்தை வந்தடைந்த போது, கரவெட்டி பிரதேச செயலகத்தால் சேகரிக்கப்பட்ட 4 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் காசோலை பிரதேச செயலர் ச.சிவசிறி, ஏற்பாட்டாளர்களிடம் வழங்கினார்.
இதில், எதிர்பாராத விதமாக யாழ் வீதிகளில் வந்த வேளை ஒரு வீட்டிலிருந்த யுவதி ஒருத்தி ஓடி வந்து முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஜெயவர்த்தனவை கட்டிப் பிடித்து முத்தமிட்டது அனைவரையும் பரபரப்படைய வைத்துள்ளது.
தொடர்ந்து, நெல்லியடி வர்த்தக சங்கத்தினரால் 1 இலட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. இந்த நடைபவனிக்கு ஆதரவு தெரிவித்த மக்கள், நடைபவனியில் கலந்துகொண்டவர்களுக்கு, குளிர்பானம் வழங்கினர். இந்த நடைபவனி இன்று மாலை வல்வையை அடைந்து, தொடர்ந்து நாளை அங்கிருந்து புறப்பட்டு, துரையப்பா விளையாட்டரங்கை அடையவுள்ளது.




