வடகிழக்கு மாகாணமக்களுக்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் கீழ் “நல்லிணக்க தொலைக்காட்சி” சேவை ஒன்றை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்காக தனியான அலைவரிசை தற்போது வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன இன்று(20) ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.
குறித்த புதிய தொலைக்காட்சிக்கு தேவையான உபகரணங்கள் தற்போது கொள்வனவு செய்யவுள்ளதாகவும், கலையகம் அமைப்பதற்காக யாழ் மாவட்ட செயலாளர் ஊடாக யாழ்-மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு சொந்தமான 100 பேர்ச்சஸ் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் இரண்டாவது தொலைக்காட்சி சேவை கடந்த 2000 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், இதில் அதிகமாக விளையாட்டு நிகழ்வுகள் ஒளிபரப்பாவதால், வடகிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்காக தனியான தொலைக்காட்சி சேவை அவசியம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.