நாட்டில் மீளவும் இரத்தம் பாயும் யுத்தம் ஏற்படுவதனை தடுப்பது அனைவரினதும் கடமையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரன்தலாவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
“..கடந்த மூன்று தசாப்த காலமாக நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தை நினைவு கூர்வது போன்றே மீளவும் அவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதனை தடுப்பதுவும் அவசியமானது.
எவ்வாறான விமர்சனங்கள் செய்யப்பட்டாலும் அரசாங்கம் மீளவும் அவ்வாறான ஓர் துர்ப்பாக்கிய சம்பவம் இடம்பெறக் கூடாது என்பதில் கூடிய முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது..” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி அனைத்து இன மக்களும் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழக் கூடிய பின்னணியை உருவாக்குவது மிகவும் அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.