செல்லுடிபடியற்ற நுழைவு விசாவுடன் பயணம் செய்ய முற்பட்டதால் தான், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அமெரிக்காவுக்குப் பயணம் செய்ய முடியாமல் மொஸ்கோவில் தடுக்கப்பட்டார் என அமெரிக்க எல்லைக் காவல் பிரிவு தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஊடகமான Polygraph, அமெரிக்க எல்லைக் காவல் பிரிவுடன் (U.S. Border Patrol) தொடர்பு கொண்டு விசாரித்த போதே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அமெரிக்காவுக்கு உள்நுழையும் அனைத்துப் பயணிகளும், செல்லுபடியாகத்தக்க பயண ஆவணங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
வெளிநாட்டவர்கள், தற்போதைய கடவுச்சீட்டு, செல்லுபடியான நுழைவு விசா அல்லது அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நுழைவு விசா விலக்கு ஆவணத்தை வைத்திருக்க வேண்டும்.
குறித்த இந்தச் சூழலில் நாமல் ராஜபக்ஷ (வயது 31) அமெரிக்காவுக்கு பயணம் செய்வதற்கான செல்லுபடியான நுழைவு விசாவினை கொண்டிருக்கவில்லை.
பொதுவாக அனைத்துலக பயணிகளை, செல்லுபடியான பயண ஆவணங்களின்றி, அமெரிக்கா செல்லும் விமானங்களில் ஏற்ற விமான சேவை நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை.” என அமெரிக்க எல்லைக் காவல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, இதுதொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கருத்து வெளியிட முன்னர் மறுத்திருந்தமையும் என்பது குறிப்பிடத்தக்கது.