நாமல் மற்றும் கோத்தாவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு எதிர்வரும் 10ம் திகதி பாரிய ஊழல் விசாரணை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படைப் பிரிவுக்குச் சொந்தமான விமானத்தின் முறையற்ற பயன்பாடு தொடர்பிலேயே இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை எதிர்வரும் 9ம் திகதி பாரிய ஊழல் விசாரணைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தின் முறையற்ற பயன்பாடு மற்றும் விமானப்படை உத்தியோகத்தர்கள் இருவரை பசில் ராஜபக்சவின் அமெரிக்காவிலுள்ள வீட்டில் பாதுகாப்புக்கு பயன்படுத்தியமை என்பன தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு தகவல்களை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை விசாரிக்க கடந்த ஏப்ரல் மாதம் 18ம் திகதி பாரிய ஊழல் விசாரணை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தார்.

இருப்பினும், குறித்த தினத்தில் அவரால் வர முடியாது என அறிவிக்கப்பட்டு, அவரது சட்டத்தரணி மூலம் வேறு ஒரு தினம் வேண்டப்பட்டிருந்தது.

இதன் காரணமாகவே, அவர் எதிர்வரும் 9ம் திகதிக்கு மீண்டும் அழைக்கப்பட்டிருக்கின்றார்.