‘இந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நிதிக்குற்ற விசாரணைகள் தொடர்பில் எமக்கு நம்பிக்கையில்லை’ என்று தெரிவித்துள்ள ஜே.வி.பி, ‘திருடப்பட்ட பொருட்கள் அரசுடமையாக்கப்பட்டால், திருட்டுக்குற்றத்துக்கு மன்னிப்பு வழங்கியதாக அர்த்தமல்ல.
அப்படியாயின் சிறைச்சாலையிலுள்ள திருடர்களையும் விடுதலை செய்யுங்கள்’என்றும் கோரியுள்ளது.
பெலவத்தையில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில், நேற்றுத் திங்கட்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவும் அக்கட்சியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ‘சி.எஸ்.என் தொலைக்காட்சி மற்றும் பல சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டன. அப்படிச் செய்தால், திருட்டுக்குற்றத்தை மன்னித்தது போல் ஆகிவிடுமா என்றும் வினவினார்.
ஷிரந்தி ராஜபக்ஷவைக் கைது செய்யுமாறு நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தபோதும் ஏன் அதைச் செய்யவில்லை. மற்றைய ஊழல்கள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் மஹிந்த தரப்பினர் கைது செய்யப்பட்ட போதும் ஷிரந்தி ராஜபக்ஷவை ஏன் கைதுசெய்யவில்லை. இது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும்,’ ‘தற்போதைய அரசாங்கத்திலும் சரி, கடந்த கால அரசாங்கத்திலும் சரி ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய பலர் இன்னமும் கைதுசெய்யப்பட்டாமல் உள்ளனர்.
விசாரணைகள் பின்னடிக்கப்படுகின்றன. சாட்சிகள் ஆதாரங்கள் இருந்தும் அவர்கள் கைது செய்யப்படாமல் இருக்கின்றார்கள். இந்நிதிக்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை; அரசாங்கம் உரிய வகையில் மேற்கொள்ளவில்லை என்பதனை நாங்கள் மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்’ என்றார்.
நன்றி – பாநூ கார்த்திகேசு