நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு மூன்று ஊழல்களை முன்வைத்து ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
இலஞ்ச ஊழல் விசாரணைப்பிரிவில் இன்று(09) இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முறைப்பாட்டின் பிற்பாடு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியினர்;
நல்லாட்சி அரசாங்கத்தில் முதல்10 (Top 10) ஊழல்வாதிகளின் பெயர் பட்டியல் தம்மிடம் இருப்பதாகவும், அதில் நிதி அமைச்சர் ரவி உள்ளடங்குவதாகவும் தெரிவித்திருந்தனர்.
ரவி கருணாநாயக்க மீது 12 குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும், அதில் முக்கியமான மூன்று குற்றச்சாட்டுக்களுக்கு எதிராகவே இந்த முறைப்பாட்டை பதிவு செய்ய மேலும் குறிப்பிட்டனர்.
நிதி அமைச்சரும் அவருடன் இணைந்து பலர் இந்த ஊழல்களில் தொடர்பு பட்டிருப்பதாகவும், நாளை சமர்ப்பிக்கப்பட உள்ள 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வாசிக்கும் தகுதி ரவி கருணாநாயக்கவுக்கு இல்லை எனவும் இவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
குறித்த முறைப்பாட்டை பதிவு செய்வதற்காக சிசிர ஜயகொடி, மஹிந்தானந்த அலுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல மற்றும் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வருகைத் தந்திருந்தனர்.
மேலும், மேற்குறித்த பத்து அரசியல்வாதிகளில் முதலாம் இடத்தை பிரதமர் பிடித்துள்ளதாகவும், ஏனைய ஒன்பது பேர் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட உள்ளதாகவும், இந்த தகவல்களை இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியனவற்றுக்கு வழங்கப்படும் எனவும் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.