நிவாரண நடவடிக்கைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி சிலாபம் விஜயம்…

அதிக மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அனர்த்தங்களுக்குள்ளான மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நடவடிக்கைகனை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று(26) சிலாபத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

விபத்துக்குள்ளான மக்களை மீட்கும் பணிகளில் முப்படையினரது ஒத்துழைப்புடன் முறையான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரு கட்டங்களாக நிவாரண செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அனர்த்த நிலைமைகளின்போது வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களை போன்றே அனர்த்தத்தின் பின்னரான காலத்தில் மக்களின் நலன்புரி தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் அமுல்படுத்தப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

அதேவேளை, பிரதேசத்தில் இடம்பெயர்ந்த 40 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 250 பேர் தங்கியிருக்கும் நாத்தாண்டிய ஸ்ரீ புஷ்பாராம விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அம்மக்களின் குறைபாடுகள் தொடர்பாகவும் கண்டறிந்தார்.