நீங்கள் செல்பிபுள்ளயா?

செல்பி எடுப்பதற்கு என்றே தனியாக ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டன. உலகம் முழுவதும் செல்பி மோகம் பல உயிர்களை பறித்துவருகிறது. மனிதர்களின் செல்பி மோகம் ஒரு மனநோயாக மாறிவிட்டதா? என்ற நோக்கில் உலகம் முழுவது ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

நிலைமை இப்படி இருக்க, சிங்கப்பூரை சேர்ந்த நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், ஒருவர் எடுக்கும் செல்பி அவரது குணநலன்களையும், தற்போதைய மனநிலையையும் பிரதிபலிக்கும் என தெரியவந்துள்ளது.

செல்பியில் உங்கள் உதடுகளை குவித்துக்கொண்டு போஸ் கொடுத்திருந்தால், நீங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாதவராகவும், மனம் தொடர்பான பிரச்சனைகளை கொண்டவராகவும் இருக்கலாம்.

செல்பியை பகிரும்போது உங்கள் இருப்பிடத்தை குறிப்பிடாவிட்டால் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய விபரங்களை பொதுவெளியில் வெளியிட விரும்பவில்லை என்று அர்த்தம். கேமராவை தாழ்த்தி (லோ அங்கிள்) வைத்தப்படி செல்பி எடுக்கப்பட்டிருந்தால் அவர் பழகுவதற்கு இனிமையானவர்.

செல்பியில் சிரித்தப்படி இருந்தால் நீங்கள் புதிய அனுபவங்களை தேடுபவர் என்று அர்த்தம். கேமராவை நேரடியாக பார்த்தால் நீங்கள் அதிக தன்னம்பிக்கை கொண்டவர் என்று பொருள். எனவே அடுத்த முறை செல்பி எடுக்கும்போது, நீங்கள், உங்களின் புறத்தை மட்டும் அல்ல அகத்தையும் சேர்த்தே பதிவு செய்வதை மறக்கவேண்டாம்.