நீதித்துறையினைச் சேர்ந்த 117 பேருக்கு இடமாற்றம்

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை வழக்கு உட்பட பல்வேறுபட்ட சிக்கலான வழக்குகள் தொடர்பாக விசாரித்து வரும் கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஏ.நிஷாந்த பீரிஸ், இடமாற்றப்பட்டுள்ளார். இவர், எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், மாத்தறை மாவட்ட நீதிபதியாக இடமாற்றம் பெற்றுள்ளார்.

இதேவேளை, பாரிய வழக்குகளை விசாரணை செய்து வரும், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் கிஹான் பிலப்பிட்டியவும் கொழும்பு மாவட்ட மேலதிக நீதவானாக இடமாற்றம்  பெற்றுள்ளார்.

மேலும், மாவட்ட நீதவான்கள், மாவட்ட மேலதிக நீதவான்கள், மாவட்ட பதில் நீதவான்கள், மாவட்ட மேலதிக பதில் நீதவான்கள், நீதவான் நீதிமன்ற நீதவான்கள், பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான்கள், மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவான்கள், சிறுவர் சீர்திருத்த நீதவான் நீதிமன்ற நீதவான்கள், மேலதிக பதில் நீதவான் நீதிமன்ற நீதவான்கள் மற்றும் நீதவான்கள் நிறுவனத்தில் பயின்று வரும் பயிற்சியாளர்கள் என 117 பேர் இந்த இடமாற்றத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதனை, நீதிச்சேவைகள் ஆணைக்குழு உறுதி செய்துள்ளது. ஆண்டுக்கான இடமாற்றம், நவம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படும் என்று, நவம்பர் மாதம் 05ஆம் திகதி, நீதிச்சேவைக்கான ஆணைக்குழுவின் பதில் செயலாளர் ஆர்.பி.டீ.பி.பி.ரத்ணாயக்க நீதித்துறை அதிகாரிகளுக்கும் தொழிலாளர்கள் நீதிமன்றங்களின் தலைவர்களுக்கும் எழுத்து மூலம் தெரியப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.