திரைப்பட நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்றும் அவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத்தருமாறும் கோரி மேலூரைச் சேர்ந்த தம்பதி தொடர்ந்த வழக்கில் தனுஷை ஜனவரி 12-ஆம் திகதி முன்னிலையாகுமாறு மேலூர் நீதித் துறை நடுவர் மன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேருந்து நடத்துனர் கதிரேசன் (60), இவரது மனைவி மீனாட்சி (55) ஆகியோர் மேலூர் நீதித் துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:
முன்னணி நடிகராக உள்ள தனுஷின் இயற்பெயர் கலைச்செல்வன். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிறந்தார்.
மேலூரில் உள்ள ஆர்.சி. உயர்நிலைப் பள்ளியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையும், மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9, 10-ஆம் வகுப்புகளையும் படிக்க வைத்தோம்.
பின்னர் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1- வகுப்பில் சேர்த்தோம்.
ஒரு மாதத்துக்குப் பின்னர் சினிமாவில் நடிக்கப் போவதாகக் கூறிச்சென்றார்.
திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜாவிடம் சேர்ந்தார். அதன்பின் அவர் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை.
நாங்கள் பலமுறை அவரை சந்திக்க முயன்றும் சந்திக்க விடவில்லை.
வயோதிகம் காரணமாக எங்களுக்கு மருத்துவச்செலவும், உணவுக்கான செலவையும் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
கலைச்செல்வன் எங்கள் மூத்தமகன். இரண்டாவது மகள் தனலட்சுமிக்கு திருமணமாகிவிட்டது.
வேறு வருமானம் எதுவும் இல்லை. எனவே, எங்கள் மருத்துவம் மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு தற்போது நடிகராக உள்ள தனுஷ் மாதம் ரூ. 65 ஆயிரம் எங்களுக்கு ஜீவனாம்சம் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் டைட்டஸ் ஆஜரானார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் செல்வகுமார், விசாரணையை ஜனவரி 12-ஆம் திகதிக்கு தள்ளிவைத்து அன்று நடிகர் தனுஷ் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பவும் உத்தரவிட்டார்.