நெற்களஞ்சியமாக மாறும் மஹிந்தரின் மத்தல விமான நிலையம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அவரது சொந்த இடமான ஹம்பாந்தோட்டையில் 210 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்ட, இலங்கையின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தல விமான நிலையம் நெற்களஞ்சியமாக மாற்றப்படக் கூடும் என அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட இக்குறித்த விமான நிலையம் 2013ஆம் ஆண்டு கோலாகலமாக திறக்கப்பட்டது.

எனினும், இந்த விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதில்லை.

இதனால், வெறிச்சோடிக் கிடக்கும் விமான நிலையம் மற்றும் அதன் கட்டட வசதிகளை நெற்களஞ்சியமாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவருக்கு, அதன் தென் பிராந்திய முகாமையாளரால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் உள்ள எல்லா நெற்களஞ்சியங்களும் நிரம்பியுள்ள நிலையில், மேலதிக களஞ்சிய வசதிகள் தேவைப்படுகின்றன.

இந்நிலையிலேயே மத்தல விமான நிலையத்தின் கட்டட இடவசதிகளை நெற்களஞ்சியமாகப் பயன்படுத்துவதற்கு ஆலோசிக்கப்படுகிறது.

எனினும் இதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இதுவா நல்லாட்சி அரசாங்கம் என அவர் மேலும் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

(riz)