நேபாள் துணை பிரதமர் பிரகாஷ் மான்சிங் மீது நாற்காலி வீச்சு

பல நூற்றாண்டுகளுக்கு பிறகு நேபாளத்தில் கடந்த 2008–ம் ஆண்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. தற்போது அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்துள்ளது. மன்னராட்சியின் போது நேபாளம் இந்து நாடாக இருந்தது. தற்போது அது மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் மலர்ந்து மக்களாட்சி நடைபெறும் நிலையில் இன்னும் புதிய அரசியல் சட்டம் இயற்றப்படவில்லை.

எனவே, அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து பொது மக்களிடம் கருத்துகள் கேட்கப்படுகின்றன. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள தேசிய அரங்கத்தில் துணை பிரதமர் பிரகாஷ் மான்சிங் கருத்து கேட்பு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ராஷ்டீரிய பிரஜாந்திர கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பியபடி அரங்கத்துக்குள் நுழைந்தனர்.

அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து துணை பிரதமர் பிரகாஷ் மான்சிங் மீது வீசி எறிந்தனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் அப்புறப்படுத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், பொலிசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

(riz)