பங்களாதேஷில் கரைத்தொடுகிறது மோரா சூறாவளி.. – இன்றும் நாடளாவிய ரீதியில் பலத்த மழை..

மத்திய வங்காள விரிகுடாவின் கிழக்கு திசையில் ஏற்பட்டிருந்த மோரா சூறாவளி, இன்று(30) பங்களாதேஷில் கரைத்தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் குறித்த இந்த சூறாவளியின் தாக்கம் இலங்கையில் குறைவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் இன்று வான் மேகமூட்டமாக காணப்படுவதுடன், மழை மற்றும் காற்றும் நிலைமையும் காணப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் 100mm இற்கும் அதிக மழை பெய்யக்கூடும் என்பதுடன், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மோரா சூறாவளி பங்களாதேஷில் கரைத்தொடுவதால் கடற்பகுதிகளில் கொந்தளிப்பு குறைந்து காணப்படுவதாக தெரிவித்திருப்பினும், மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

 

(rizmira)