பசில் ராஜபக்ஷவின் மகனின் வீட்டில் சமையல் வேலைகளை செய்வதற்காக இலங்கை கடற்படையினர் இருவர், இராஜதந்திரக் கடவுச்சீட்டில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் கலிபோர்னியாவில் உள்ள பசில் ராஜபக்சவின் மகனின் வீட்டில் சமையல் செய்வதற்காக இரண்டு கடற்படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இலங்கை தூதரகத்தில் தோட்டவேலை செய்பவர்கள் என்று கூறியே இவர்களுக்கு இராஜதந்திரக் கடவுச்சீட்டு பெறப்பட்டு, அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனினும்,அவர்கள் பசில் ராஜபக்சவின் மகனின் வீட்டில் உணவு சமைத்துப் பரிமாறுபவர்களாகவே பணியாற்றியிருந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடற்படையினரில் ஒருவர் திருமணத்துக்காக நாடு திரும்பிய போது, புஸ்பா ராஜபக்ஷசவின் உத்தரவின் பேரில், இராஜதந்திரக் கடவுச்சீட்டை வைத்திருந்தார் என்று கைதுசெய்யப்பட்டார்.
இரண்டாவது கடற்படைச் சிப்பாய், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் முடிந்த பின்னர், நாடு திரும்பினார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த இராஜதந்திரக் கடவுச்சீட்டுகளுக்கு 2017 வரை அமெரிக்காவில் வதிவிட உரிமை வழங்கப்பட்டிருந்தது என்றும், பாரிய மோசடிகள், அதிகார துஸ்பிரயோகங்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.