“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குமாறு, அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தன்னை அச்சுறுத்தினார்” என்று, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதாவது, பிரதான எதிர்க்கட்சியை இரண்டாகப் பிளவுப்படுத்தி, அதிலொரு பிரிவினரை அரசாங்கத்துக்குள் இணைத்துக்கொள்ளும் நோக்கிலேயே, தனக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ, அங்கு வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அச்சுறுத்தினார் என்று நான் கூறவில்லை. எனினும், அமைச்சரான துமிந்த திஸாநாயக்க, எனக்கு, அழைப்பை எடுத்து, ‘இதனை (ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை) ஏங்களிடம் கையளிக்குமாறு கூறுங்கள்… அரசாங்கம் எங்களுடையது… அப்படி இல்லாவிடின், நீதிமன்றத்துக்குச் சென்று, அதனைப் பெற்றுக்கொள்ளும் முறை எங்களுக்கு தெரியும்’ என்று அச்சுறுத்தினார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், பாதாள உலகக் கோஷ்டியினரின் செயற்பாடுகளை அடக்கி, நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்குகளை நிலைநாட்டப்பட்டது என்றும், கோட்டாபாய தெரிவித்தார்.
“கடந்த ஆட்சியின் போதே, பாதாள உலகக் கோஷ்டியினர் அடக்கப்பட்டனர். எனினும், சட்டம் மற்றும் ஒழுங்குகளை நிலைநாட்டுவதாகக் கூறிக்கொண்ட இந்த நல்லாட்சி அரசாங்கம், அதனைத் தலைகீழாகவே செய்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.