பனாமா ஆவணங்கள் தொடர்பாக விசாரணைகளை துரிதமாக நடத்துமாறு, பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குறித்த இந்த உத்தரவு, அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷரீபுக்கு எதிரானதாக அமையுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதம நீதியரசர் அன்வர் சகீல் ஜமாலி உள்ளிட்ட 5 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம், முக்கியமான அமைச்சர்கள், சட்டத்தரணிகள் முன்னிலையில், இந்த உத்தரவைப் பிறப்பித்தது. வெளியிடப்பட்ட பனாமா ஆவணங்களின்படி, பிரதமரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வரி ஏய்ப்புச் செய்யும் நோக்கில், வெளிநாடுகளில் கணக்குகளையும் நிறுவனங்களையும் வைத்திருந்ததாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த ஆவணங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென, பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில், இம்ரான் கானின் கட்சி சார்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுக்கள் அனைத்தும் மீதான விசாரணையின் பேரிலேயே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.