பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான புதிய சட்டமூலமொன்றைக் கொண்டுவருவது தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை அரசாங்கத்தினால் பேச்சுவார்த்தையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கும் ஐ.நா.வின் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான குழுவின் நிர்வான இயக்குநர் ஜோன் போல் லெபோட்டுக்கும் இடையில், மேற்படி புதிய சட்டமூலம் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இந்த சட்டமூலத்தை ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகள் மற்றும் சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைய தயாரிப்பது தொடர்பில், இந்தப் பேச்சுவார்த்தையின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டிலிருந்து முற்றுமுழுதாக பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக, ஐ.நா.வின் ஒத்துழைப்பை முழுமையாகப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது கருத்துரைத்துள்ள அமைச்சர் சாகல ரத்நாயக்க, தேசிய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான புதிய நீதிச் சட்டமூலங்கள் மூன்றினை இலங்கை தற்போது தயாரித்துக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.