பயணிகளுக்கான பயணச்சீட்டை விநியோகிக்க பஸ்களில் இலத்திரனியல் இயந்திரம்…

போக்குவரத்துச் சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்காக உத்தேச துணைப் புதிய திட்டத்தை இந்த வருடத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்காக அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுவதற்கான ஆவணம் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக அமைச்சின் போக்குவரத்து அபிவிருத்தித் திட்டப் பிரதிப் பணிப்பாளர் பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய திட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ்களுக்கு பயணிகளுக்கான பயணச் சீட்டை விநியோகிப்பதற்காக இலத்திரனியல் இயந்திரம் அறிமுகப்படுத்தப்படும். ஒரு இயந்திரத்திற்காக ஒதுக்கீடு செய்யப்படும் பணம் 50 ஆயிரம் ரூபாவாகும். இதற்கான அடிப்படைத் தொகையை நிதியமைச்சு பொறுப்பேற்க உள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரத்திற்கமைய இதனைப் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கை மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைகளில் கிடைக்கக்கூடிய உரிய வருமானம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கிடைப்பதில்லை என்பது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. புதிய நடைமுறையின் கீழ் பயணிகளுக்கு வசதியான முறையிலும் சேவைகள் இடம்பெறவுள்ளன. வருமானம் வீண்விரயமாவதும் தடுக்கப்படும்.

இதன் மூலம் நாட்டின் பொது போக்குவரத்துச் சேவையின் தரத்தையம் செயற்திறனையும் அதிகரிக்க முடியும் என்று அமைச்சின் போக்குவரத்து அபிவிருத்தித் திட்டப் பிரதிப் பணிப்பாளர் பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.