பலஸ்தீனத்தின் தலைநகராக ஜெரூசலத்தை அறிவிக்க 57 இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தல்…

பலஸ்தீன் நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க வேண்டும் என 57 இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவு செல்லாது என இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளின் அமைதி பேச்சுவார்த்தை நடவடிக்கையில் இருந்து வாஷிங்டன் விலக வேண்டும் என்பதை இது குறிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் உரையாற்றிய பலஸ்தீன் அதிபர் அப்பாஸ், “இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒருதலை பட்சமாக செயல்படுவதால்” மத்திய கிழக்கு நாடுகளின் அமைதிக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதை “ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கூறினார்.

டிரம்ப் நிர்வாகத்துடன் ஈடுபட்டிருந்த பலஸ்தீனியர்கள் “இந்த நூற்றாண்டுக்கான உடன்படிக்கையை” ஏற்றுக்கொள்ள முயற்சித்தனர். ஆனால் அவர்களுக்கு கிடைத்தது “மிக மோசமான அடி” என்றும் அவர் குறிப்பிட்டார்.