பல நாடுகளுடன் பொருளாதார ஒப்பந்தம்

இலங்கையில் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் நோக்கில் பல நாடுகளுடன் பொருளாதார ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போதே இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை அவர் வெளியிட்டார்.

நாட்டின் புதிய அரசு ஆட்சிக்கு வந்தபிறகு பல நாடுகளுடன் வலுவான உறவுகள் ஏற்பட்டு வருவதால், சீரான பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதிய பொருளாதாரக் கொள்கைகள் முலம், இலங்கை உலகச் சந்தைக்குள் நுழைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கூறும் அவர், பல நாடுகளுடன் பொருளாதார உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொள்ளும் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன என்கிறார்.

அந்த வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவுடன் பொருளாதார உடன்படிக்கையும், சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகும் வாய்ப்புகள் உள்ளன என அவர் கூறுகிறார்.

ஜப்பான், துருக்கி, ஈரான், பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய நாடுகளுடனும் இலங்கை பொருளாதார உடன்படிக்கைகளை செய்துகொள்ளவுள்ளன எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

துறைமுக நகர் சிறப்பு நிதி மற்றும் வர்த்தக மையமாக மாறும்போது நாட்டுக்கு பெரியளவில் வருமானம் கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.