பழம், காய்கறிக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்…

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகின்றமை காரணமாக அம்மாநில பழம், காய்கறிகளை இறக்குமதி செய்ய ஐக்கிய அரபு அமீரக அரசு தடை விதித்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்துள்ளதுடன், இதுவரை 2 தாதியர்கள் உட்பட 14 பேர் பஉயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், காய்கறிகளுக்கு தடை விதித்து ஐக்கிய அரபு அமீரக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து விதமான பழங்கள், காய்கறிகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து அபுதாபி உணவு கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் துபாய், சார்ஜா உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.