(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை இராணுவத்தின் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதையிட்டு ஐக்கிய நாடுகளின் வல்லுநர்கள் குழுவொன்று பலத்த கவலை தெரிவித்துள்ளதுடன் பாதுகாப்புத் துறை தொடர்பாக நீண்ட காலம் நிலுவையில் உள்ள சீர்திருத்தங்களை முன்னெடுக்கவும் பழைய இராணுவ துஷ்பிரயோகங்களை விசாரிக்கவும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
லெப்டினன்ற் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத் தளபதியாக கடந்த 18ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.
25 வருட கால உள்நாட்டு யுத்தத்தில் சவேந்திர சில்வா பாரதூரமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் நிலையில், இராணுவத் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டமை மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் உள்ளிட்ட பல தரப்பினரின் கரிசனைக்குள்ளானமையும் குறிப்பிடத்தக்கது.