எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி தொடக்கம் பஸ் கட்டணத்தை 6 வீதமாக உயர்த்துவதற்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆயினும் குறைந்த கட்டணம் ரூபா 9 ஆக காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால், பஸ் கட்டண அதிகரிப்பு தொடாபில் பஸ் சங்கங்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த பஸ் கட்டண அதிகரிப்பு போதுமானதல்ல என அகில இலங்கை தனியார் பஸ் நிறுவன சம்மேளனத்தின் தலைவர் அன்ஜன பிரியான்ஜித் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
குறுந்தூர பஸ் சேவைகளுக்காக இந்த பஸ் கட்டண அதிகரிப்பு எந்த வகையிலும் ஏற்றக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஸ் கட்டணத்தை ஜூலை மாதம் 1ம் திகதி தொடக்கம் 3.2 வீதத்தினால் அதிகரிக்கவே அரசாங்கம் உத்தேசித்திருந்தது எனவும், தமது சங்கத்தின் போராட்டத்தினாலேயே 6 வீத உயர்வு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 6 வீத பஸ் கட்டண அதிகரிப்பு போதுமானது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
இதனை விடவும் அதிகளவு கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் பஸ்களில் பயணிப்பதனை குறைத்துக் கொள்ளலாம் என அவர் நேற்று கொழும்பு ஊடகமொன்றுக்குத் கருத்து வெளியிட்டுள்ளார்.