பாகியங்கல, கற்குகையில் சரிவு அபாயம் இல்லை என குகை சம்பந்தமாக மோற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த தினங்களில் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த கற்குகையை அண்மித்த பகுதியில் சரிவு அபாயம் ஏற்பட்டிருந்ததாக தகவல்கள் வௌியாகியிருந்தன.
இது தொடர்பில் பரிசோதிக்க விஷேட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று கல்வியமைச்சரினால் நியமிக்கப்பட்டிருந்தது.
அதன்படி அந்த கற்குகைக்கு முன்னால் 2008ம் ஆண்டு தொடக்கம் மெல்லிய கோடு ஏற்பட்டுள்ளதாக அந்தக் குழுவின் சோதனை நடவடிக்கையின் போது தெரிய வந்துள்ளது.
எனினும் அங்கு சரிவு அபாயம் இல்லை என்று அந்தக் குழுவினர் தெரிவித்தனர்.
இந்த வலயத்தை பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக வர்த்தமானியில் பிரசுரிக்க தேவையான நடவடிக்கையை எடுப்பதற்கும், ஒவ்வொரு நாளும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் அளவை குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின், தொல்பொருளியல் திணைக்களம், மத்திய கலாச்சார நிதியம், தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் ஆகியன இணைந்து இந்நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாக கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.