(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்காத இலங்கை அணி வீரர்கள் தமது இடத்தை இழப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்கு குழு தலைவர் அசந்த டி மெல் குறிப்பிட்டுள்ளார்.
கராச்சி சென்றிருக்கும் ஹசந்த டி மெல் செய்தியாளர்களிடம் இதனை குறிப்பிட்டார்.
“பாகிஸ்தான் வராத வீரர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக வராமல் இருப்பதற்கு தீர்மானித்தார்கள். ஆனால் எந்த ஒரு விளையாட்டிலும் தமது இடத்தை வேறு ஒருவருக்கு கொடுத்தால் அதில் அவருக்கு அச்சுறுத்தல் ஒன்று இருக்கிறது. வந்தவர் சிறப்பாக செயற்பட்டால் இருப்பவருக்கு சந்தர்ப்பம் நழுவிப்போகும். சில வேளை அப்படி நடக்கலாம். அது அவர்கள் செய்த ஆபத்தான வேலை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நான் அவர்களிடம் பேசும்போது, பாகிஸ்தானுக்கு வருவதும் வராமல் இருப்பது அவர்களது விருப்பம். அதற்கு நாம் எந்த அழுத்தமும் கொடுக்கப்போவதில்லை. ஆனால், தமது இடத்தை வேறு யாருக்காவது கொடுத்து அவர்கள் சிறப்பாக செயற்பட்டால் அவர்களை அணியில் இருந்து நீக்க முடியாது என்று அறிவுறுத்தினேன். இந்த நிலையை சாதகமாகவே பார்க்கிறேன் என்று ஹசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடர் என்பவற்றில் பங்கேற்கிறது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கராச்சியில் நடைபெறவிருந்த முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திமுத் கருணாரத்ன, லசித் மாலிங்க, குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, ஏஞ்சலோ மெத்தியூஸ், குசல் மெண்டிஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.