பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டிருந்த, ‘சார்க்’ மாநாட்டை நேபாளில் நடாத்த திட்டம்.

பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டிருந்த, ‘சார்க்’ எனப்படும் தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் 19-வது மாநாட்டை தங்கள் நாட்டில் நடத்த நேபாளம் விருப்பம் தெரிவித்துள்ளது.

சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் 19-வது மாநாடு வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதாக இருந்தது. எனினும், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான முறைகளினை தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட ஐந்து உறுப்பு நாடுகள் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தது.

நவம்பர் 9, 10ம் திகதிகளில் நடக்கவிருந்த குறித்த இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் தீவிரமாக செய்து வந்தது. இதனிடையே, காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த தகவல் நேபாளத்தில் உள்ள சார்க் அமைப்பின் தலைமையகத்திற்கு இந்திய அரசின் சார்பில் கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியா மட்டுமல்லாது, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இலங்கை ஆகிய நாடுகளும் சார்க் மாநாட்டை புறக்கணித்து விட்டன. இதையடுத்து, ஒற்றை நாடாக அனாதையாகிப்போன பாகிஸ்தான், சார்க் மாநாட்டை ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்நிலையில், பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டு, இந்தியா உள்ளிட்ட ஐந்து உறுப்பு நாடுகளின் புறக்கணிப்பால் ரத்து செய்யப்பட்ட சார்க் எனப்படும் தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டை தங்கள் நாட்டில் நடத்த நேபாளம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நேபாள நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பிரகாஷ் ஷரன் மஹத், தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் கூட்டுறவு மற்றும் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட சார்க் அமைப்பின் 19-வது மாநாட்டை எங்கள் நாட்டில் நடத்த விரும்புகிறோம்.

இதுதொடர்பாக, உறுப்பு நாடுகளுடன் கலந்து பேசி, ஆலோசித்து, வலியுறுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.