ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவி இழந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டின் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதலில் மூன்று பொலிசார் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு பதவியை இழந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தற்போது விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நவாஸ் ஷெரீப்பின் இல்லம் அருகே உள்ள நிசார் பொலிஸ் சோதனைச் சாவடி நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் மூன்று பொலிசார் உட்பட ஏழு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படுகாயமடைந்த சில பொலிசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரது நிலைமை மோசமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சமபவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கபடுகின்றது. மேலும், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.