பாகிஸ்தானுக்கான ரூ.1700 கோடி இராணுவ உதவி நிறுத்தம்…

டிரம்ப் அறிவிப்பைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு வழங்கப்படவிருந்த ரூ.1700 கோடி இராணுவ நிதி உதவியை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கிறது என்றும், நிதி உதவி பெறுவற்காக அமெரிக்காவை ஏமாற்றி விட்டது என்றும் அதற்காக கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ரூ.2 லட்சம் கோடி கொடுத்துள்ளது என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
புத்தாண்டு தினத்தன்று டுவிட்டரில் இக்கருத்தை அவர் பதிவு செய்தார்.

இதற்கு பாகிஸ்தான் இராணுவ அமைச்சகம் டுவிட்டரில் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளது. “தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் சுதந்திரம் அளித்தது.

அல்கொய்தா தீவிரவாத அமைப்பை அழிக்க கடந்த 16 ஆண்டுகளாக நிலம், வான் பகுதி, இராணுவ தளங்கள் மற்றும் உள்நாட்டு ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறோம். அதையும் மீறி தீவிரவாதிகள் எல்லை தாண்டி வந்து பாகிஸ்தான் மக்களை கொன்று குவித்தனர் என தெரிவிக்கப்பட்டது.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை புளோரிடாவில் மாராலோகோவில் கழித்து விட்டு அதிபர் டிரம்ப் வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு இன்று திரும்பினார்.

அதை தொடர்ந்து டிரம்பை சந்தித்த நிருபர்கள், பாகிஸ்தான் மீது எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறீர்கள்? என கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், பாகிஸ்தான் இராணுவத்துக்கு அமெரிக்கா வழங்க இருந்த ரூ.1700 கோடி (225 மில்லியன் டாலர்) நிறுத்தி வைக்கப்பட்டது. இத்தகவலை அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் மீதான டிரம்பின் இத்தகைய நடவடிக்கையை ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வரவேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.