பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி படுதோல்வி கண்டதைத் தொடர்ந்து டி20 கெப்டன் அப்ரிதி தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து இப்போது வக்கார் யூனிஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: கனத்த இதயத்துடன் எனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன். நியூஸிலாந்து தொடர், ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பை ஆகியவற்றில் அப்ரிதியின் மோசமான கெப்டன்ஷிப் காரணமாகவே பாகிஸ்தான் அணி தோற்றது.
அப்ரிதியின் பேட்டிங்கும் சரியில்லை. அவருடைய பந்துவீச்சும் நன்றாக இல்லை. ஒரு கெப்டனாக அவர் சரியாக செயல்படவில்லை என தெளிவாக தெரிவித்தேன். ஆனால் நான் கூறியதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செவி சாய்க்கவில்லை.
2015 உலகக் கோப்பைக்குப் பிறகு அணியை பலப்படுத்துவது தொடர்பாக சில பரிந்துரைகளை அளித்தேன். சரியாக விளையாடாத வீரர்கள் குறைந்தபட்சம் ஒரு சீசனிலாவது முதல்தர போட்டியில் விளையாட வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஃபார்முக்கு திரும்புவார்கள். அவர்களுடைய அணுகுமுறை மாறும் என்பது அந்த பரிந்துரையில் குறிப்பிடத்தக்கவை. ஆனால் அதை அமல்படுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.