பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. முந்தைய போட்டியின் போது மைதானத்துக்கு அருகில் தற்கொலைப்படையின் தாக்குதல் அரங்கேறியதால் பலத்த பாதுகாப்பு மத்தியில் இந்த போட்டி நடைபெற்றது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 296 ரன்களை கைப்பற்றியது.
ஜிம்பாப்வே அணி விளையாடுகையில் 8-வது ஓவர் முடிவில் கருமேகங்கள் சூழ சுமார் 30 நிமிடம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ஜிம்பாப்வே அணிக்கு 46 ஓவர்களில் 281 ரன்கள் வெற்றி இலக்காக மாற்றி அமைக்கப்பட்டது. 9 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி விக்கெட் இழப்பின்றி 68 ரன்களை எடுத்திருந்த போது போது மழை குறுக்கிட்டது.
தொடக்க ஆட்டக்காரர்கள் சிபந்தா 28 ரன்னுடனும், ஷிபாபா 39 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மழை தொடர்ந்து பெய்ததால் போட்டியை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர். இந்த போட்டி தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி தொடர்நாயகன் விருது பெற்றார்.