(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரண்டு நாட்கள் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று காலை சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சீனாவின் பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் நாட்டிற்கான சீன தூதுவர் யா ஜிங் இருவரும் வரவேற்றுள்ளனர்
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லீ கெகியாங் ஆகியோரை சந்திக்கவுள்ளதுடன், குறித்த இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள், வர்த்தக உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை இடம்பெறும் என பாகிஸ்தான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதில் இருந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
சீன அதிபர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இம்ரான் கானின் சீன பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.