முச்சக்கரவண்டிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பயணிகள் போக்குவரத்து மற்றும் பாடசாலை வேன் சேவையினை தரமிக்கதாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முச்சக்கரவண்டிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பயணிகள் போக்குவரத்து மற்றும் பாடசாலை வான் சேவையினை தரமிக்கதாக விருத்தி செய்வதற்காக கட்டுப்பாட்டு அதிகார சபையொன்றை ஸ்தாபிப்பதற்கு 2017 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டது.
குறித்த முன்மொழிவினை செயற்படுத்தும் வகையில் அது தொடர்பில் ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவென அமைச்சின் செயலாளர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்காக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.