பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று(05) மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும், தூதரகத்தை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், அமெரிக்கா அறிவுரை செய்துள்ளதுடன் தூதரகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, துருக்கியில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க உளவுத்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் தூதரகத்தில் பொதுமக்கள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. தூதரகம் திறக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
சிரியாவில் தற்போது நடைபெற்று வரும் உக்கிரமான தாக்குதலை தொடர்ந்து துருக்கியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.