பாராளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் – விமலுக்கு எதிராக நடவடிக்கை..

அண்மையில், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, பாராளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்த வேண்டியது அவசியம் என, கூறியதாக தெரிவிக்கப்பட்ட கருத்து குறித்து, சபாநாயகர் கரு ஜெயசூரிய அவதானம் செலுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, மேற்குறித்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமலின் இந்தக் கூற்றால் பாராளுமன்ற ஜனநாயகத்தை கொண்டு செல்வது மற்றும் மக்களின் பிரதிநிதிகளின் பாதுகாப்பு ஆகியவை தொடர்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இது குறித்து அவதானம் செலுத்துமாறும், அவர்கள் சபாநாயகரிடம் கோரியுள்ளனர்.

இதற்கமைய, அடுத்த சபை அமர்வின் போது இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, கரு ஜெயசூரிய தரப்பில் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

(rizmira)