(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு புலனாய்வுத்துறை உயர் அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தினால் இனிமேல் அமைச்சரவை கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று(07) இரவு 7.30 அளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இது தொடர்பில் தெரிவிக்கையில்;
“.. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான 05 வழங்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டுவரும் பின்னணியில் தெரிவுக்குழுவொன்றினை நியமித்து விசாரணை செய்தல் உயர் நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என சட்டமா அதிபர் தனக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி என்ற வகையில் தான் அதனை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தேன். எனினும், ஜனாதிபதி ஒருவரினால் சமர்ப்பிக்கப்படும் அத்தகைய கடித ஆவணங்கள் பாராளுமன்ற அமர்வின் தொடக்கத்திலேயே சம்பிரதாயபூர்வமாக சபாநாயகரினால் முன்வைக்கப்படுகின்ற போதிலும் சபாநாயகர் இவ்விடயம் குறித்து பாராளுமன்றத்தில் எதுவித கருத்துக்களையும் வெளியிடாமை தொடர்பில் தான் வருத்தமடைந்தேன்..”
பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ள ஜயம்பதி விக்கிரமரத்ன மற்றும் ஆசு மாரசிங்க ஆகியோர் தனக்கு எதிராக செயற்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவை ரத்து செய்யும்வரை இனிமேல் எந்தவொரு அரச நிகழ்வுகளிலும் மற்றும் அமைச்சரவை கூட்டத்திலும் தான் பங்கேற்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.