பிரதமரின் புதிய வரிகள் குறித்து அநுர குமார கேள்வி

பிரதமர், நேற்று செவ்வாய்க்கிழமை (08) விடுத்த விசேட கூற்றின் ஊடாக, வரிகள் அதிரிக்கப்பட்டுள்ளன. ஒரு வகையில் இதனை, புதிய வரவு – செலவுத் திட்டமாகவே  கருத வேண்டியிருக்கின்றது என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க இவ்விவகாரம் தொடர்பில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (08), பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் விடேச கூற்றொன்று விடுக்கப்பட்டு உரையாற்றியதன் பின்னர் எழுந்த அநுர குமார கூறுகையில்;

எம்.பி, ‘பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த வருடம் நவம்பர் மாதம் 05ஆம் திகதியன்று பட்ஜெட் (பாதீடு) ஒத்திகை பார்த்தார். அதன்பின்னர் அமைச்சர் ரவி கருணாநாயக்க, பாதீட்டைச் சமர்ப்பித்தார். அதற்கான திருத்தங்களை பிரதமர் சமர்ப்பித்தார்.

தற்போது, அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை என்றொன்றை, பிரதமர் சமர்ப்பித்துள்ளார். இதனூடாக, வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பாதீட்டில் அறிவிக்கப்பட்டவைக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் இருக்கின்றது. ஆகையால் முழுநாள் விவாதம் வேண்டும்’ என்றார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, ‘விவாதத்துக்கு நாள் குறிப்பது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசி தீர்மானிக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.