ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான விவகாரத்தில் பிரதமர் கமெரூன் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக எதிர்கட்சி உறுப்பினர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பிலான பொதுமக்கள் வாக்கெடுப்பு இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டோபி பெர்கின்ஸ் ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய விவகாரத்தில் பிரதமர் கமெரூனிற்கு சாதகமான முடிவுகள் ஏற்படாவிட்டால், அவர் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு வாய்ப்புள்ளது.
இதனால், கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக பதவி ஏற்கும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களில் 3-ல் 2 சதவிகிதத்தினர் உடனடி பொது தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தினால் அதனை தவிர்க்க முடியாது.
இவ்வாறு ஒரு சூழல் ஏற்பட்டால், இந்த ஆண்டு இறுதிக்குள் கூட பொது தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாகவும், அதனை எதிர்க்கொள்ள தொழிலாளர் கட்சியின் தலைவரான ஜெரிமி கொர்பைன் உள்ளிட்ட அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என டோபி பெர்கின்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த தகவலுக்கு கன்சர்வேட்டிவ் கட்சியினர் எந்த பதிலும் இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.