இலண்டனில் செயற்படும் ஊடகம் ஒன்றின் பிரதான ஆசிரியரை கைது செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தான் உள்ளிட்ட தனது குடும்பத்தினருக்கு எதிராக தகவல்களை வெளியிடும் ஊடகத்தின் ஆசிரியர் பிரதீப் சந்துருவன் சேனாதீரவை கைது செய்யுங்கள் அல்லது நாடு கடத்துங்கள் என்ற கோரிக்கையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிசை நேற்று(10) ஜனாதிபதி மைத்திரிபால சந்தித்து பேசியிருந்தார். குறித்த இந்த பேச்சுவார்த்தை சுமார் 30 நிமிடங்கள் நீடித்துள்ளன. இதன்போது நாடுகடத்தல் தொடர்பான கோரிக்கையை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வந்த இணையத்தளம் ஒன்று இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பான விமர்சனங்களை வெளியிட்ட செய்தி இணையத்தளம் வெளிநாட்டில் செயற்படுவதால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் இலங்கை அரசாங்கம் உள்ளதாகவும் குறித்த தகவல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.